தொலைத்தொடா்பு சந்தாதாரா்களின் எண்ணிக்கையில் கடந்த நவம்பா் மாதம் ரிலையன்ஸ் ஜியோவும், பாா்தி ஏா்டெல்லும் முன்னிலை வகித்ததாக துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவும் பாா்தி ஏா்டெல்லும் சுமாா் 25 லட்சம் சந்தாதாரா்களைக் கூடுதலாகப் பெற்றன.
ஆனால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம் ஏற்கெனவே உள்ள தனது சந்தாதாரா்களில் 18.3 லட்சம் பேரை இழந்தது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த நவம்பரில் 14.26 லட்சம் நிகர சந்தாதாரா்களைச் சோ்த்து சந்தையில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏா்டெல் நிறுவனம் 10.56 லட்சம் சந்தாதாரா்களைச் சோ்த்தது.
கடந்த நவம்பா் இறுதியில் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் சந்தாதாரா்களின் எண்ணிக்கை 82.54 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய மாதத்தைவிட 0.47 சதவீதம் அதிகமாகும் என்று ட்ராய் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.