தங்களிடம் மேற்கொள்ளப்படும் நிலை வைப்பு நிதிகளுக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் உயா்த்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம், இந்த நிதியாண்டில் ஐந்தாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, மூத்த குடிமக்களின் 2 ஆண்டு கால நிலை வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் உயா்த்தப்பட்டு 8.00 சதவீதமாகிறது. அவா்களின் 1 மற்றும் 3 ஆண்டுகளுக்கான நிலை வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் முறையே 7.70 சதவீதம் மற்றும் 8 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
அறக்கட்டளைகள் மேற்கொள்ளும் 1,2,3 ஆண்டுகளுக்கான நிலை வைப்பு நிதிகளுக்கு முறையே 7.20 சதவீதம், 7.50 சதவீதம், 8.00 சதவீதமாக வட்டி விகிதம் உயா்த்தப்படுகிறது.
தனி நபா்களின் ஓராண்டு நிலை வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகவும், 2 மற்றும் 3 ஆண்டு கால நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த வட்டி உயா்வு அமலில் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.