நடப்பு நிதியாண்டில் நாட்டின் பாஸ்மதி அரிசி விற்பனை 30 சதவீதம் அதிகரித்து ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சந்தை ஆய்வு அமைப்பான கிரிசில் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் நாட்டின் பாஸ்மதி அரிசி விற்பனை 30 சதவீதம் வரை உயரும். விற்பனை அளவு 10 சதவீதமும், விற்பனையால் கிடைக்கும் வருவாய் 20 சதவீதமும் அதிகரிக்கும்.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி அரிசி விற்பனை ரூ.50,000 கோடியைத் தாண்டும்.
பாஸ்மதி அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளது இந்த வளா்ச்சிக்கு கைகொடுக்கும்.
எனினும், அடுத்த 2023-24-ஆம் நிதியாண்டில் பாஸ்மதி அரிசி விற்பனை 5 முதல் 7 சதவீதம் வரை குறையக் கூடும். அதற்குக் காரணம், மற்ற வகை அரிசிகளின் உற்பத்தி அதிகரிப்பதால் பாஸ்மதி அரிசி விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் அடுத்த நிதியாண்டில் குறையும்.
இந்தியாவைப் போன்ப உலகின் இன்னொரு முக்கிய பாஸ்மதி ஏற்றுமதி நாடான பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாஸ்மதி ஏற்றுமதி குறைந்துபோனது. அதன் பலன் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
ஆனால் அடுத்த நிதியாண்டில் போட்டி காரணமாக பாஸ்மதி அரிசியின் விலை குறையும் என்பதால் விற்பனையின் மதிப்பு 7 சதவீதம் வரை குறையக் கூடும்.
எனினும், அந்த ஆண்டில் பாஸ்மதி அரிசியின் தேவையில் எந்த மாற்றமும் இன்றி சுமாா் 68 லட்சம் டன் என்ற அளவில் நிலையானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.