தேசியவாதம் மற்றும் தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் காரணமாக சீனா படிப்படியாக தனிமைப்படுத்தப்படும் என ஆசியவின் முதன்மை பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் குளோபல் 2022 என்ற முதன்மை செயல் அதிகாரிகளுக்கான மாநாடு சிங்கப்பூரில் செப். 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் பணக்காரரான கெளதம் அதானி கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 36 மாதங்களில் உலகமே சவாலான சூழலை எதிர்கொள்ளும் என யாரும் கணித்திருக்க முடியாது. தேவைகளும், உற்பத்தியும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பு இந்தியாவில் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என்றே கருதுகிறேன். ஆனால் உலகமயமாக்களில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா படிப்படியாக தனிமைப்படுத்தப்படும் என்றே கணிக்கிறேன். அதிகரிக்கும் தேசியவாதம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளால் இந்த நிலையை சீனா அடையலாம். 1990களில் ஜப்பான் பொருளாதாரத்திற்கு நேர்ந்த நிலைமையே சீனாவிற்கும் ஏற்படலாம்.
எரிசக்தி ஆற்றல் மாற்றத்தில் 70 சதவிகிதம் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளேன். அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி ஏற்றுமதி மையமாக இந்தியா மாறலாம் எனக் குறிப்பிட்டார்.