இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஐ-போன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களில் ஏற்றுமதி மதிப்பு இரு மடங்கு அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் பயன்பாடு உலகம் முழுவதும் விரிவடைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஐ-போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 14 என்ற புதிய ரக செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரக ஐ-போனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரம் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐ-போன் 11, 12, மற்றும் 13 ஆகிய ரக செல்போன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் ஏற்றுமதி மதிப்பு ரூ.8,159 கோடி என அமெரிக்காவைச் சேர்ந்த வணிகச் செய்தி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இரு மடங்காக அதிகரிக்கும் எனவும் கணக்கிட்டுள்ளது.