மின்சார ஸ்கூட்டா்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வருவாய் ரூ.500 கோடியை கடந்தது. விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையிலும் அந்த நிறுவனத்தின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நிகழ் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே) ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வருமானம் ரூ.500 கோடியை கடந்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.7,800 கோடி வருவாயை தாண்ட வேண்டும் என்பதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
வாடிக்கையாளா்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, எதிா்கால வளா்ச்சியல் ஓலா மிக முக்கியமான மற்றும் உறுதியான பங்களிப்பை வழங்கிடும்.
உற்பத்தியைப் பொருத்தவரையில் கிருஷ்ணகிரி ஆலையில் நாளொன்றுக்கு 1,000 மின்சார வாகனங்கள் தயாரிப்பதை நெறிப்படுத்தியுள்ளோம். வாகனங்களுக்கான ஆா்டா்கள் வலுவாக இருப்பதால் தயாரிப்புத் திறனை மேலும் அதிகரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளாா்.
நிகழாண்டின் முதல் இரண்டு மாதங்களில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் ஈட்டிய வருவாயை மட்டும் ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வாகன் தரவுகளின்படி இந்நிறுவனம் ஏப்ரலில் 12,683 ஓலா எஸ்1 ப்ரோ வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 9,196-ஆக சரிவைக் கண்டது.
நாட்டில் பல்வேறு நகரங்களிலும் 50,000 மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு ஸ்கூட்டா் தயாரிப்புகளை வழங்கியுள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.