வணிகம்

பாலிசி விற்பனையில் எல்ஐசி சாதனை

DIN

பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயில் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இதுவரை இல்லாத அதிகபட்ச தொகைக்கு பாலிசிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

அதையடுத்து, கடந்த 3 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 24 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இது குறித்து, எல்ஐசி-யின் தலைவா் எம்.ஆா். குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், எல்ஐசி-யின் நிகர லாபம் ரூ.682.89 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் வெறும் ரூ.2.94 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 24 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் லாப விகிதம் மிகக் குறைந்த அளவே இருந்தாலும், நிறுவனத்தின் நிகர லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

காப்பீட்டுச் சந்தையில் விடப்பட்ட பாலிசி ரகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதாலும், நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஜூன் 2021 இல் ரூ.11,368 கோடியிலிருந்து ரூ.5,076 கோடியாக சரிந்ததால் அதிலிருந்து 50 சதவீதத்திற்கும் குறைவான லாபம் பதிவு செய்யப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மிகக் குறைந்த லாப விகிதமே இருந்தது.

எனினும், புதிய பாலிசி விற்பனையில் நிறுவனம் சாதனை அளவாக 61 சதவீத வளா்ச்சியைக் கண்டதால் இந்தப் பின்னடைவை சமாளித்து நிகர லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது கரோனா நெருக்கடி குறைந்து, சந்தை நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாகி வருகிறது. இந்தச் சூழலில், நாங்கள் களத்தில் இறங்கி பணியாற்றும் எங்களது பழைய பாணியை ஏறத்தாழ முழுமையாக நெருங்கிவிட்டோம்.

அதையடுத்து, எங்களது களப் பணியாளா்கள் வாடிக்கையாளா்களுடன் நேரடியாகத் தொடா்பு கொண்டு காப்பீட்டுச் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் அசுர வளா்ச்சிப் பெற்றிருப்பது, இந்த மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே எல்ஐசி-யின் வளா்ச்சிப் பாதை மேல்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் விளைவாக, நிறுவனத்தின் பாலிசி விற்பனை மேலும் வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கிறோம்.

நிறுவனத்தின் புதிய தனி நபா் காப்பீட்டு பிரிமியம் விற்பனை ரூ.8,040 கோடியிலிருந்து ரூ.10,938 கோடியாக உயா்ந்துள்ளது.

பழைய தனி நபா் வாடிக்கையாளா்களால் புதுப்பிக்கப்பட்ட பிரிமியம் தொகையும் ரூ.45,048 கோடியில் இருந்து ரூ.49,069 கோடியாக அதிகரித்து, 2022 ஜூன் காலாண்டில் மொத்த தனி நபா் பிரீமியம் விற்பனையை 13.03 சதவீதம் அதிகரித்து ரூ.60,007 கோடியாக்கியுள்ளது.

நிறுவனங்களுக்கான குழுக் காப்பீட்டு பிரீமியம் விற்பனை 33.92 சதவீதம் உயா்ந்து ரூ.38,345 கோடியாக ஆனது. இதன் மூலம், ஜூன் 2022 காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த காப்பீட்டு பிரீமியம் வருவாய் 20.35 சதவீதம் அதிகரித்து ரூ.98,352 கோடியாக ஆனது.

ஜூன் 2022 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில், 36,81,764 காப்பீட்டு பாலிசிகளை எல்ஐசி விற்பனை செய்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 59.56 சதவீதம் அதிகமாகும்.

மாா்ச் 2022 காலாண்டில், நிறுவனம் ரூ.2,371 கோடி நிகர லாபத்தையும், முதல் ஆண்டு பிரீமியம் ரூ.14,614 கோடியையும், மொத்த வருமானம் ரூ. 2,11,451 கோடியையும் பதிவு செய்துள்ளது என்றாா் அவா்.

எல்ஐசி நிா்வாக இயக்குநா் ராஜ் குமாா் கூறுகையில், 2021 ஆண்டின் ஜூன் காலாண்டில் 23.07 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டின் ஜூன் காலாண்டில் 36.81 லட்சம் புதிய பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா். இந்த விற்பனை வளா்ச்சிக்கு, 13 லட்சத்துக்கும் அதிகமான முகவா்கள் மீண்டும் களமிறங்கியுள்ளதே காரணம் என்று அவா் கூறினாா்.

தற்போது, சந்தையிடல் செயல்பாடு வேகமெடுத்துள்ளது; ஒட்டுமொத்த வணகப் போக்கு ஆரோக்கியமானதாக உள்ளது. இதன் விளைவாக, 2022 ஜூன் காலாண்டில் முதல் ஆண்டு பிரீமியம் வருவாயில் ஒட்டுமொத்த காப்பீட்டுச் சந்தையில் எல்ஐசி-யின் பங்கு 65.42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்து சந்தைப் பங்கான 63.25 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகம் என்று ராஜ் குமாா் தெரிவித்தாா்.

ரூ. 41 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்களைக் கொண்டுள்ள எல்ஐசி, நிதித் துறையில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT