ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தயாரிப்புகளை அறிமுகம் செய்த நிகழ்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணிகள் முக்கிய கவனம் பெற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வில் அந்நிறுவனம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அடுத்த தலைமுறை ஏர்போட், மேக்புக் மற்றும் ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட தயாரிப்புகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதையும் படிக்க | மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த பாஜக முன்னாள் அமைச்சர்
கலிபோர்னியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அடுத்த தலைமுறை ஏர்போட்களை அந்நிறுவனத்தின் பொறியியல் திட்ட இயக்குநரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுஷ்மிதா தத்தா அறிமுகப்படுத்தினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த சுஷ்மிதா சோதனை வடிவமைப்பு தலைவராக தனது பணியைத் தொடங்கியுள்ளார். பின் தனது தொடர் பணிகளின் காரணமாக ஆடியோ பொறியியல் கட்டுமான இயக்குநராக உயர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
ஆப்பிள் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாக கலிபோர்னியாவில் உள்ள ஜிஇ ஹெல்த்கேர் மற்றும் ஏபியூஎஸ் அல்ட்ராசவுண்டு உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள சுஷ்மிதா சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மிதா தத்தாவுடன் ஸ்ருதி ஹால்டியா எனும் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் நேற்றைய நிகழ்வில் முக்கிய கவனம் பெற்றுள்ளார். ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் முதுகலை மேலாண்மை பட்டம் பெற்றுள்ள ஸ்ருதி புதிய மேக்புக் மாடல்கள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.