இன்ஸ்டாகிராம் பதிவுகளை பயனர்கள் இனி தங்களது கணினியிலும் பதிவிடுவதற்கான வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம் செயலி. சமூக வலைத்தள பயன்பாட்டில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒன்றாக உள்ளது. பயனர்களின் தேவைகளுக்காக அவ்வப்போது இந்த செயலியில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பயனர்கள் தேவைக்கேற்ப கணினியில் தங்களது பதிவுகளை பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கணினியில் பயனர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியை கணினியில் பயன்படுத்தும்போது கூகுள் உள்ளிட்ட தேடுபொறியில் இன்ஸ்டாகிராமை இணைப்பதன் மூலமே பதிவுகளை பதிவிட முடிந்தது குறிப்பிடத்தக்கது.