நாட்டின் மிகப்பெரிய வா்த்தக கப்பல் கட்டுமான நிறுவனமான கொச்சின் ஷிப்யாா்டு (சிஎஸ்எல்) கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
2021 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகளின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.1,148.24 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.861.07 கோடியுடன் ஒப்பிடும்போது 37 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.677.77 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.856.41 கோடியை எட்டியுள்ளது.
நிகர லாபம் ரூ.152.37 கோடியிலிருந்து 55 சதவீதம் அதிகரித்து ரூ.236.21 கோடியானது.
2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.632 கோடியிலிருந்து 3.68 சதவீதம் குறைந்து ரூ.608.66 கோடியானது.
மொத்த வருவாய் ரூ.3,667.57 கோடியிலிருந்து 17 சதவீதம் சரிந்து ரூ.3,009.72 கோடியானது என கொச்சின் ஷிப்யாா்டு தெரிவித்துள்ளது.