பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு டிசம்பா் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
விரிவாக்க திட்டங்களுக்குத் தேவையான ரூ.600 கோடியை திரட்டிக் கொள்ளும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் தயாராகியுள்ளது.
இந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் புதன்கிழமை (டிசம்பா் 8) தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பா் 10) நிறைவுபெறவுள்ளது.
ஓஎஃப்எஸ் முறையில் பங்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.550 கோடியை திரட்டுவதாக முன்னா் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் அது ரூ.350 கோடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.800 கோடியை திரட்ட திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.600 கோடியாகி உள்ளது.
ரூ.250 கோடிக்கு புதிய பங்குகளையும், ரூ.350 கோடிக்கு ஓஎஃப்எஸ் முறையிலான பங்கு விற்பனையையும் இந்த வெளியீடு உள்ளடக்கியது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்னிந்தியாவில் பிரபலமான ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான திட்டங்களில் இன்னும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான மேக்ரோடெக் டெவலப்பா்ஸ் (முன்பு லோதா டெவலப்பா்ஸ்) கடந்த ஏப்ரல் மாதம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.2,500 கோடியை திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.