நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.5,941.37 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய தனிப்பட்ட லாபம் ரூ.1,910.84 கோடியுடன் ஒப்பிடுகையில் 210 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும், முந்தைய மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது நிறுவனத்தின் லாபம் 32 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு, ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கமே முக்கிய காரணம்.
ஜூன் காலாண்டில் ஒவ்வொரு கச்சா எண்ணெய் பேரலையும் எரிபொருளாக மாற்ற கிடைக்கும் வருவாய் 6.58 டாலராக இருந்தது. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஒவ்வொரு பேரல் மூலமாகவும் 1.98 டாலா் இழப்பு ஏற்பட்டது.
முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 74 சதவீதம் அதிகரித்து ரூ.1.55 லட்சம் கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ரூ.28,500 கோடி மதிப்பிலான மூலதன செலவினங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.4,000 கோடி முதல் காலாண்டில் செலவிடப்பட்டதாக ஐஓசி தெரிவித்துள்ளது.