ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள் பொருத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று மாவட்ட சுகாதார இயக்குநர்களுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2,286 கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு சம்மந்தப்பட்ட கேமரா நிறுவன ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் தமிழக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
'ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருப்பு அறையிலும் மருத்துவ அதிகாரி அறையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பகலில் முடியாதபட்சத்தில் மாலை, இரவு நேரங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த துணை இயக்குநர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்க வேண்டும்' என்று கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | அக். 3ல் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! கூட்டணி குறித்து முக்கிய முடிவு?
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்கள் வேலையைச் செய்ய தடுக்க வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இரண்டு கேமராக்கள்(2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4,572 சிசிடிவி கேமராக்கள்), 100 மீட்டர் லேன்(LAN) கேபிள், ஒரு நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் வழங்குமாறு எல்காட் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிக்மா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், பயோ-விஷன் செக்யூர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சிசிடிவி கேமராக்கள் வாங்கி அந்த நிறுவன ஊழியர்கள் கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2023-24 பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த ரூ.10.17 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 'தென் மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை' - அதிர்ச்சியளிக்கும் புதிய விதிகள்!