தமிழ்நாடு

காஞ்சிபுரம்: விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விபத்தில் பலி

28th Sep 2023 02:29 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மது வாங்கிச் சென்ற இளைஞரை கைது செய்து விசாரணைக்காக கலால் காவல் துறையினர் பைக்கில் அழைத்து சென்றபோது விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெளியே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே குண்டு குளம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய மகன் சீனிவாசன் (26). நேற்று இரவு கீழ்க்கதிப்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 30 மதுபான பாடில்களை வாங்கிக் கொண்டு சென்றபோது காஞ்சிபுரம் கலால் பிரிவு காவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மதுபான பாடல்களை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

மேலும் சீனிவாசனை கலால் துறையினர் பைக்கில் அமர வைத்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சீனிவாசன் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த தனியார் பேருந்து சீனிவாசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சீனிவாசனை கலால் துறையினர் முறையாக அழைத்து செல்லாததால் இந்த மரணம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் அவரின் உறவினர்கள் குவிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சீனிவாசனின் உறவினர்களுடன் கூடுதல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இருப்பினும், சீனிவாசனின் மரணத்துக்கு கலால் காவல் துறையினர்தான் காரணம் என்றும், அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்கப்பட்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உடலை வாங்குவோம் எனத் தெரிவித்துவிட்டனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெளியே உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT