மதுரை: மதுரையில் கடன் தொல்லையால் முன்னாள் ராணுவ வீரர் தன் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் சர்வேயர் காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் (41). இவரது மனைவி விசாலினி(36). இவர்களது மகள் ரமிஷா ஜாஸ்பல்(12) ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர் சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.
இந்த நிலையில் ரமேஷ் குடியிருந்த வீடு கடந்த இரு நாள்களாக திறக்கப்படவில்லை. இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் புதன்கிழமை மாலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பாலை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷமருந்திய நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதையும் படிக்க | கூகுளின் நிலநடுக்க எச்சரிக்கை சேவை: இந்தியாவில் அறிமுகம்
இதனையடுத்து காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டு அதிக கடன் அடைந்த காரணமாக தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].