தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவுபெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/ உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 - 24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் இன்று நிறைவு பெற்றுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு செப்.19ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது.
முன்னதாக செப்.15-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு தொடங்கி நடைபெற்று வந்தது. தோ்வுக்குப் பிறகு செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், 6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு மாறாக, இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 13ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு 9 நாள்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆசிரியா்களுக்கு தோ்வு கண்காணிப்பு, எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. உளவியல் ரீதியாக ஆசிரியா்களுக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும். எனவே, கடந்த ஆண்டைப்போல நிகழாண்டிலும் காலாண்டு தோ்வுக்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே, பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.