தமிழ்நாடு

பூண்டி ஏரி நிரம்பியது! உபரிநீர் திறப்பு!!

25th Sep 2023 06:19 PM

ADVERTISEMENT

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியதால் 2 மதகுகள் வழியாக தலா 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் நீர் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலையில் 2 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

திருவள்ளூர் அருகே சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது.இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.  இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி (25.09.2023) நீர் இருப்பு 34 அடியாகவும், கொள்ளளவு 2823 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதோடு பூண்டியில் நீர் வரத்து 1,520 கன அடியாக உள்ளது.

ADVERTISEMENT

தற்போது  அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால்   நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.  அணைக்கு வரும் நீர்வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்ப்பதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை  அணையின் பாதுகாப்பு கருதி மாலை  4 மணி அளவில் உபரி நீரைக திறக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் மாலையில் நீர் திறப்பதற்கு முன்பாக அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் ஏரியின் 3,12 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு, தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாய்ந்தது.

இந்த நிலையில், நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து  அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.

இதைத்தொடர்ந்து, நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT