சேலம்: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
கர்நாடகம் - தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால் இதைப் புரிந்துகொள்ள முடியாத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளை தாக்குவதும் கண்ணாடிகளை உடைப்பதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக லாரி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதேபோல கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வரும் அனைத்து லாரிகளுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க..கரோனாவைவிட கொடூரமான வைரஸ்.. எச்சரிக்கும் சீன வைராலஜிஸ்ட்
மேலும் நாளை காவிரி நதிநீர் பிரச்சினை வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழக லாரிகள் தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடக அரசு லாரி ஓட்டுநர்களுக்கும் லாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் வடமாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளை ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.