தமிழ்நாடு

சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

24th Sep 2023 12:04 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நிறைவு செய்யுமாறு, துறை அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டு மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் குறித்த சேவைத்துறை அலுவலா்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆணையா் ராதாகிருஷ்ணன் பேசியது:

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகள் மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுகளை கடந்த செப்.20-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள சாலை வெட்டுப் பகுதிகளில் சேவைத்துறைகள் பணிகளை உடனடியாக முடித்து, சாலை சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை வெட்டுகளையும், பழுதடைந்த, குண்டும், குழியுமான சாலைகளைக் கணக்கெடுத்து சீரமைக்க மாநகராட்சி சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதனடிப்படையில் பழுதடைந்த, குண்டும், குழியுமான சாலைகளில் ஜல்லிக் கலவை, தாா்க்கலவை மற்றும் கான்கிரீட் கலவை மூலம் சீரமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்திடவும், பொதுமக்களுக்கு இடையூறின்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் இணை ஆணையா் (பணிகள்) ஜி. எஸ். சமீரன், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா் செ.சரவணன், வட்டார துணை ஆணையா்கள் எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு), எம்.பி.அமித், (தெற்கு) மற்றும் பல்வேறு சேவை துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT