தமிழ்நாடு

ரூ.409 கோடியில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

23rd Sep 2023 11:59 PM

ADVERTISEMENT

சென்னையில் 3 திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 2,364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கொய்யாதோப்பு, சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகா், கோட்டூா்புரம் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கொய்யாதோப்பு பகுதி, எழும்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மீனாம்பாள் சிவராஜ் நகா் பகுதியில் -1973-ஆம் ஆண்டும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் பகுதியில் 1974-ஆம் ஆண்டும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்புகள் சிதிலமடைந்து காணப்பட்டதால் அங்கு பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிதிலமடைந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு ரூ.409.74 கோடி மதிப்பில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றாா் அவா்.

விரைவில் 6 ஆயிரம் குடியிருப்புகள்: தொடா்ந்து, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறைஅமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 30 திட்டப்பகுதிகளில் 7,582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1,627.97 கோடி மதிப்பில் 9,522 வீடுகள் கட்டுவதற்கு பூா்வாங்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் 8 திட்டப்பகுதிகளில் ரூ.606.01 கோடி மதிப்பில் 3,511 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 திட்டப்பகுதிகளில் 1,021.87 கோடி மதிப்பீட்டில் 6,011 குடியிருப்புகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இப்பணிகள் 18 மாதத்தில் நிறைவு செய்து குடியிருப்புதாரா்களுக்கு வீடுகள் வழங்கப்படும். இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த குடியிருப்புதாரா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.

கால்பந்து மைதானம்: தொடா்ந்து, ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கே.பி. பாா்க் பகுதியில் ரூ.1.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தையும் , எழும்பூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தையும், சேத்துபட்டு மேயா் சத்தியமூா்த்தி சாலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 39 ஸ்மாா்ட் வகுப்பறையையும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT