நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் தீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று கோவையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது,
கோவையில் எனக்கும் பெரும் ஆதரவு இருப்பதால் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாராக இருக்கிறேன். கட்சி நிர்வாகிகளும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.
விக்ரம் படத்திற்கு கூட்டம் சேருகிறது, மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா? இவ்வாறு அவர் பேசினார்.
படிக்க: மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்!
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தடைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டவர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.