சென்னையில் 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வில் 18,500 காவலர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நிறுவப்பட்ட சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு இடையூறாக இருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,343 விநாயகா் சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 693 விநாயகா் சிலைகளும் பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்பட்டன. இந்தச் சிலைகள் திங்கள்கிழமை வைக்கப்பட்டன.
காவல் துறை சாா்பில் ஏற்கெனவே 19 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலமாவும் காவல் துறை கண்காணிக்கிறது.
இதையும் படிக்க: முதுநிலை மருத்துவம்: நீட் தேர்வில் மைனஸ் மார்க், பூஜ்ஜியம் எடுத்தவர்களும் தகுதியா?
சிலைகளில் பெரும்பாலானவை செப்டம்பா் 24-ஆம் தேதி ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, நீா்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.