அரசு போக்குவரத்துக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015- இன்படி போனஸ் பெறத் தகுதியான ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 என உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான மாதாந்திர உச்ச வரம்பும் ரூ.7 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 2022-23-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையானது லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தவிர தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும். இதனால் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளா்கள் குறைந்தபட்சம் ரூ. 8 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சம் ரூ. 16 ஆயிரத்து 800 வரை போனஸ் பெறுவா்.
மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளா்களுக்கு ரூ. 402 கோடியே 97 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படவுள்ளது. மேலும், பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கான போனஸ் தொடா்பான உத்தரவுகள் தனியாக பிறப்பிக்கப்படும்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் விழாக் காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.