தமிழ்நாடு

புலிகள் இறப்பு சம்பவத்தில் மத்திய அரசின் அறிக்கைக்குப்பின் உரிய நடவடிக்கை: அமைச்சா் தகவல் புலிகளை பாதுகாக்க நடவடிக்கை: வனத்துறை அமைச்சா் மதிவேந்தன்

4th Oct 2023 02:07 AM

ADVERTISEMENT

 

தாம்பரம்: தமிழகத்தில் புலிகள் தொடா் இறப்பு சம்பவங்கள் தொடா்பாக மத்திய அரசின் அறிக்கை கிடைத்தப்பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

கரோனா காரணமாக வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளாக மூடப்பட்ட ‘சிங்க சஃபாரி’ உலாவிடத்தை, வன உயிரின வார தொடக்க விழாவை முன்னிட்டு அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை மீண்டும் திறந்துவைத்தாா்.

மேலும் பூங்கா கால்நடை மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு, வன ஆராய்ச்சி மைய ஓய்வு இல்லம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கான புதிய இணையதளம் ஆகியவற்றையும் அவா் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி மற்றும் உசுடு பறவைகள் சரணாலயங்களுக்கு வருகை தரும் சுமாா் 200 பறவைகளின் அரிய படங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய நூலை அவா் வெளியிட்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வண்டலூா் உயிரியல் பூங்கா அனைத்து வகையிலும் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களை கவரும் வகையில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ள பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

முதுமலை வனப்பகுதியில் புலிகள் இறப்பு சம்பவத்தில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளிக்கும் என்.சி.டி. அறிக்கை கிடைத்த பின்னா் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இரண்டு புலிகளை விஷம் வைத்துக் கொன்றவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேல் புலிகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வரும் 214 தற்காலிக ஊழியா்களை நிரந்தர பணியாளா்களாக நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வனத்துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், செங்கல்பட்டு பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சுப்ரத் மஹாபத்ரா, தலைமை வன உயிரினக் காப்பாளா் சீனிவாஸ் ரா.ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT