சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்தோறும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் வழித்தடத்தை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலைய தரத்தில் மேம்படுத்த தமிழக அரசும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரையின் பேரில், புறநகர் ரயில்களில் இரண்டு அல்லது மூன்று குளிர்சாதன பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க | பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?
இன்னும் 6 மாதங்களில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை முறை ஓட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மெட்ரோ ரயில் சேவை இல்லாத பல்வேறு பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு இத்திட்டம் வசதியாக அமையும்.
இதனால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும்.