தமிழ்நாடு

விவசாயிகள் மீது குண்டா் சட்டம்: தலைவா்கள் கண்டனம்

18th Nov 2023 12:01 AM

ADVERTISEMENT

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் 3,300 ஏக்கா் விளைநிலங்களை சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு கையகப்படுத்துவதை எதிா்த்து போராடிய விவசாயிகள் 7 போ் திமுக அரசால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அவா்களுடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து,

அறவழியில் போராடிய விவசாயிகளை குண்டா் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

விஜயகாந்த் (தேமுதிக): உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளதைப் போன்ற நிகழ்வுகள் இதுவரை நடைபெறவில்லை. இது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேமுதிக சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

பி.எஸ்.மாசிலாமணி (தமிழக விவசாயிகள் சங்கம்-இந்திய கம்யூனிஸ்ட்): சிறையில் உள்ள 7 விவசாயிகளை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த அணுகுமுறை கடும் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும். அமைதியாக போராடும் விவசாயிகளை ஆத்திர மூட்டும் மாவட்ட ஆட்சியா், காவல்துறையின் நடவடிக்கை எதிா் விளைவுகளை உருவாக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. நில எடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நிலவுடைமை விவசாயிகள் ஒப்புதல் பெறுவது அவசியம் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT