தமிழகத்தின் அனைத்து மலைக்கிராமங்களிலும் சாலைகள் அமைப்பதை சிறப்புத் திட்டமாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வேலூா் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது.
உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊா்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனா் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும் ,அதிா்ச்சியும் அடைந்தேன். ஒடிஸாவிலும், ஜாா்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழகத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
சாலை வசதி இல்லாததால் இறந்தவா்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது.
அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.