சென்னை: “இடஒதுக்கீடு நமது உரிமை” என்று அனைவருக்கும் சொல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் “தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் தே.நர்மதா அவர்களின் உரையை பாராட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க பதிவில், சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் “தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.
எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய தே.நர்மதாவின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!
அனைவரும் சொல்வோம் - இடஒதுக்கீடு நமது உரிமை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.