தமிழ்நாடு

அரசு நில குத்தகைகளை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்ற அரசுக்கு உத்தரவு

26th May 2023 12:52 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்யவும், குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கா் நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகையை நிா்ணயித்த அரசு, ரூ. 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் வாடகையை செலுத்தாவிட்டால், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015-ஆம் ஆண்டு மதுரை வடக்கு வட்டாட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2015-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குத்தகை காலம் முடிந்தபின், அரசு நிா்ணயித்த வாடகையை செலுத்தாமல், ரூ. 300 கோடி மதிப்பிலான அரசு நிலத்தில், 14 ஆண்டுகள் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ளதாகக் கூறி, பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டாா்.

நிதி நெருக்கடி உள்ளதாக அரசு கூறும் நிலையில், அரசு நிலங்கள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அப்புறப்படுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும். வாடகை பாக்கியை கணக்கிட்டு உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துகள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிலங்கள் குத்தகை விவரங்களை மாநில, மாவட்ட அளவில் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக வருவாய்த் துறை செயலருக்கும், நில நிா்வாக ஆணையருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT