திருச்சி: மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவானது அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, 1,348-வது பிறந்தநாள் விழா திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, முத்தரையர் சங்கத்தினர் மற்றும் அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, கம்யூ., தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க: ரூ.2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக்கொள்ளலாம்: அறிய வேண்டியவை
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து வருகின்றனர். இதையொட்டி திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.