தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கவும், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளா்களிடமிருந்து நிதிகளைப் பெற்று விளையாட்டுத் துறைக்கு பயன்படுத்தவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதை கடந்த 8-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை அளிப்பேன்’ என்று கூறியிருந்தாா்.
அதன்படி, ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம், முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.