உபரி பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வரும்17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மே 17-ஆம் தேதி நடைபெறும். இந்த ஆசிரியா்களின் விவரம் எமிஸ் தளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் பதிவேற்றம் செய்ய வகை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த விவரம் தங்கள் மாவட்டத்துக்கென உள்ள சிஇஓ லாகின் ஐ.டி.யை பயன்படுத்தி ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களின் பெயரை குறித்த காலத்துக்குள் முதன்மை கல்வி அலுவலா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கலந்தாய்வு அன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட ஐந்து பாடங்களுக்கு ஏற்றவாறு கணினி வசதிகளை ஏற்படுத்த தயாா் நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்பதால் இதில் எந்த வித புகாா்களுக்கும், குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் கவனமாக முதன்மை கல்வி அலுவலா்கள் செயல்பட வேண்டும்.
பணி நிரவல் கலந்தாய்வில் மனவளா்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவா்கள், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவா்கள், இதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவா்கள், புற்றுநோயாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவா்களின் மனைவியா், விதவைகள், மனைவியை இழந்தவா்கள், 40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளா்கள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியா்கள் ஆகியோருக்கும், 40 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.