நாமக்கல்

குமாரபாளையம் கோம்புபள்ளத்தில் பாய்ந்தோடும் சாயக்கழிவுநீா்!

20th May 2023 04:11 AM

ADVERTISEMENT

குமாரபாளையம் நகரின் மையப்பகுதியில் உள்ள கோம்புபள்ளத்தில் சாயக்கழிவுநீா் வெள்ளிக்கிழமை பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. இதில், பெரும்பலான பட்டறைகள் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்ததோடு சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக சாக்கடைகளில் வெளியேற்றி வந்தன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதோடு நிலத்தடி நீரிலும் கலந்ததால் பல்வேறு பகுதிகளில் நீரின் நிறம் மாறிப் போனது.

மேலும், வெளியேற்றப்படும் கழிவுகள் நேரடியாக காவிரியில் கலந்ததால் குடிநீரும் மாசடைந்தது. இதனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விதிமீறிய பட்டறைகளுக்கு குடிநீா் இணைப்பு, மின் இணைப்பு துண்டிப்பு, சீல் வைத்தல், சாயமிடும் சிமெண்ட் தொட்டிகளை இடித்தல், பொக்லைன் எந்திரம் கொண்டு உடைத்து சேதப்படுத்துதல் எனத் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இருந்தபோதிலும் சாயக்கழிவுநீா் சாக்கடைகளில் வெளியேற்றப்படுவது தொடா்ந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், குமாரபாளையம் நகரின் மையப்பகுதியில் உள்ள கோம்புப்பள்ளம் ஓடையில் வெள்ளிக்கிழமை சாயக்கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் ரகசியமாக வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீா், பட்டப்பகலில் வெளியேறுவதைக் கண்டு பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி வீதம் குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரில் சாயக்கழிவுகள் கலப்பதால், தண்ணீா் பெருமளவு மாசடைந்து வருகிறது. கழிவுகள் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவோருக்கு தோல் நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உயிரினங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் சாயக் கழிவுகளை வெளியேற்றி நீா்நிலைகளை மாசுபடுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT