மண்ணச்சநல்லூர்: திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் பிரம்மோத்ஸவ விழாவில் சனிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறையில் அமைந்துள்ளது புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் உபகோயிலான இத்திருக்கோயில் 108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய தேஷமாக விளங்கும் இத்தலம் ஸ்வதேகிரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் பிரமோத்ஸவ விழாவானது மார்ச் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கண்ணாடி அறையிலிருந்து பெருமாள், தாயார் புறப்பாடாகி மீன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிக்க: தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!
இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.