சென்னையில் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியையொட்டி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற மார்ச் 19 ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
இத்தகவலை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின்(பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடப்பதால் மெட்ரோ நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.
நிகழ்ச்சியைக் காண வருவோருக்கான மெட்ரோ ரயில் சேவை 11 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.