பொதுத்தேர்வையொட்டி கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டியில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் தேர்வு நேரத்தில் பங்கு திருவிழா நடத்த தடை விதிக்க கோரியும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாவை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் விழாக்களின் போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், தேர்வுக் தயாராகும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையும் படிக்க | இந்தியன் ஆயில் நிறுவன வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019 ஆம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 2019 ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை பின்பற்றுவதாக தெரிவித்தார்.
அனைவரது வாதங்களையும் ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும் என்றும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் படிப்பதற்கான சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொண்டு வேண்டும்.
மேலும், 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு, கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.