முதல்வர் கோப்பை -2023 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் 38 மாவட்டங்களை சேர்ந்தவீரர்-வீராங்கனைகளின் அணி வகுப்பு நடைபெற்றது.
ஒலிம்பிக் தடகள வீராங்கனை செல்வி.ரேவதி மற்றும் சர்வதேச வாலிபால் வீரர் வைஷ்ணவ் ஆகியோர் முதலமைச்சர் கோப்பைக்கான சுடரினை அமைச்சரிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பைக்கான சுடரினை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ஒலிம்பிக் வீராங்கனை சுபா தலைமையில் விளையாட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. விழாவில்கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முனைவர் அதுல்ய மிஸ்ரா, வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி.இ. நன்றியுரை ஆற்றினார். விழாவில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி கூறியதாவது, முதல்வர் கோப்பை போட்டிகளில் தமிழகம் முழுவதும் 3.70 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே முதல்வர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜூலை 1-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில், சென்னையின் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகம், மேலக்கோட்டையூா் விளையாட்டு பல்கலைக்கழகம், ராமச்சந்திரா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் என பல்வேறு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.