தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக சிறப்பு குழந்தைகள் காப்பகம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக இக்காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவங்கி வைத்துள்ளார்.
குழந்தைகளை கவனித்துக்கொள்ள 4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் 7 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை ஒளிப்பரப்ப தொலைக்காட்சியும், விளையாடும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருந்த மேட் போடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் கொடுத்துச்செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவு மற்றும் சத்து நிறைந்த சிற்றுண்டிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகம் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 வயதிற்கு உள்பட்ட பள்ளிகளுக்குச் செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும் மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.