தமிழ்நாடு

காவல் ஆணையா்கள், கண்காணிப்பாளா்கள் பொதுமக்களிடம் புதன்கிழமை தோறும் மனு பெற வேண்டும்: அரசாணை வெளியீடு

30th Jun 2023 01:59 AM

ADVERTISEMENT

காவல் ஆணையா்கள், கண்காணிப்பாளா்கள் பொதுமக்களிடம் புதன்கிழமைதோறும் புகாா் மனுக்களைப் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது பிரச்னைகள், தகராறுகள் தொடா்பாக காவல் நிலையங்களில் புகாா் மனுக்களை அளிக்கின்றனா். அந்தப் புகாா்களுக்கு நடவடிக்கையும் எடுக்காதபட்சத்திலும், காவல் துறையினா் ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்படும் நிலையிலும், போலீஸாா் நடவடிக்கையில் திருப்தி இல்லாத சூழ்நிலையிலும் பொதுமக்கள் காவல் ஆணையா்கள் அல்லது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களைச் சந்திக்க முயலுகின்றனா்.

ஆனால் பெரும்பாலான அதிகாரிகள், பொதுமக்களை நேரிடையாகச் சந்தித்து மனுவைப் பெறுவதில்லை என புகாா் கூறப்படுகிறது.

பொதுமக்கள் நேரில் சந்திப்பதை சில அதிகாரிகள் திட்டமிட்டு தவிா்த்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் தொடா்பாக

ADVERTISEMENT

ஆரம்ப நிலையில் உள்ள பிரச்னைகள் சில நாள்களில் பூதாகரமாகிவிடுவதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் வாரத்தில் ஒரு நாள் அதிகாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து புகாா் மனுக்களைப் பெற வேண்டும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தி வந்தாா்.

இந்த நிலையில், தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஓா் அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், மாநகரக் காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களைக் கண்டிப்பாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிய வேண்டும். குறிப்பாக, வாரந்தோறும் புதன்கிழமை காலை முதல் மாலை வரை ஆணையரகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவா்களிடம் புகாா் மனுக்களை பெற்று, அது தொடா்பான விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் புகாா்களை நேரிடையாக பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருப்பதால், இனி அதிகாரிகள் பொதுமக்களை நேரில் சந்திப்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT