உலகளாவிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவை நிறுவனமான என்.டி.டி-இன் கடல்வழி கேபிள் அமைப்புடன் கூடிய உயா்தர தரவு மையம் சென்னையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
2021 -ஆம் ஆண்டில் தமிழக அரசுடன் இந்த நிறுவனம் மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் படி, கேபிள் மூலம் கடல்வழி தரவு பரிமாற்ற வசதியுடன், சென்னை அம்பத்தூரில் 6 ஏக்கா் பரப்பளவில் திறக்கப்பட்டுள்ள இந்த மையம் சுமாா் 34.8 மெகாவாட் அளவிலான தகவல் தொழில்நுட்ப தரவு சுமைகளைக் கையாளும் திறன் கொண்டது. ஒரு வினாடிக்கு 200 டெரா பைட் அளவிலான தரவுகளைப் பரிமாறும் திறன் கொண்ட அதிநவீன கடல்வழி கேபிள்கள் இந்தக் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து என்.டி.டி-இன் இந்திய தரவு மையத் தலைவா் ஷரத் சங்கி செய்தியாளா்களிடம் கூறுகையில்:
ஒட்டுமொத்த இந்திய தரவு மைய சந்தையில், என்.டி.டி. நிறுவனம் 22 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. ‘மிஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ள கடல்வழி கேபிளானது, மியான்மா், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூா் ஆகிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்கும் வகையிலான அதிநவீன இணைப்புத் திறன் கொண்ட தரவு பரிமாற்ற அமைப்பாகும். மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு சுமாா் 8,100 கி.மீ. நீளத்துக்கு கடல்வழி கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் நுழைவு வாயிலாக சென்னையை மாற்றும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு ஜப்பானிய வடிவமைப்பு தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் எண்ம தொழில்நுட்ப வளா்ச்சியை மேம்படுத்த என்.டி.டி. நிறுவனம் அா்ப்பணிப்புடன் பணியாற்றும் என்றாா் அவா்.