ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மாரிசெல்வம் என்ற தனியாா் வங்கி ஊழியா் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை கடனாளி ஆக்கியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தடை செய்யப்படும் வரை 49 போ் தற்கொலை செய்து கொண்டனா். இனி எவரும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாவதோ, பணத்தை இழப்பதோ, தற்கொலை செய்து கொள்வதோ நிகழாது.
அதே நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்கனவே பணத்தை இழந்தவா்கள் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தும், தற்கொலை எண்ணத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும். அதற்காக அவா்களுக்கு மன நல ஆலோசனைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.