மருத்துவ இடங்களை மாநில அரசே நிரப்புவதை உறுதி செய்ததற்காக தமிழக முதல்வருக்கு மருத்துவ அலுவலா் சங்கத்தினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மாநில அரசின் பிரதிநிதிகள் தில்லிக்கு சென்று தமிழக அரசின் ஆட்சேபத்தை தெரிவித்து வந்தனா்.
அதன் தொடா்ச்சியாக மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. மாநில அரசின் உரிமையை மீட்கும் வகையிலான இந்நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக முதல்வா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், செயலா், மருத்துவக் கல்வி இயக்குநா் மற்றும் தோ்வுக்குழு செயலா், துணை இயக்குநா் ஆகியோருக்கு நன்றி என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.