வேலூர்: கணியம்பாடி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிவரை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடிய மற்றவர்கள் விட்டுச்சென்ற 9 கள்ள நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர்.
அப்போது, ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் துரத்திச் சென்றதில் திருவண்ணாமலை மாவட்டம் அமிர்தி நம்மியம்பட்டு மலைப்பகுதியில் உள்ள கீழ்சார்னாங்குப்பத்தைச் சேர்ந்த சுதாகர்(23) என்பவரை கள்ள நாட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மற்றவர்கள் விட்டுச்சென்றது என மொத்தம் ஒன்பது கள்ள நாட்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.