தூத்துக்குடி தூய பனிமயமாதா சொரூபம் தங்கமுலாம் பூசும் பணிக்காக பீடத்தில் இருந்து சனிக்கிழமை இறக்கி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூயபனிமயமாதா பேராலயத்தில் உள்ள மாதா சொரூபத்துக்கு தங்கமூலாம் பூசப்பட உள்ளது. இதற்காக மாதாவின் சொரூபம், பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில், பீடத்தில் இருந்து சனிக்கிழமை இறக்கப்பட்டு, திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) ரோமன் கத்தோலிக்க தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு நிறைவுதினத்தை முன்னிட்டு, தூய பனிமயமாதா ஆலயத்தில் காலை 9 மணி முதல் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அன்றையதினம், பீடத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்திற்கு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்நிகழ்வில், போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை வகிக்கித்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.
இதில் ஆயர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, மாதா சொரூபத்தை, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் தரிசிக்கலாம் என்பதால், பொதுமக்கள் திரளாக வந்து மாதாவை வழிபட்டுச் செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து, தங்க முலாம் பூசும் பணி வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பணி 10 முதல் 15 தினங்கள் நடைபெறும் எனவும், அதன் பின்னர் தூயபனிமயமாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் உள்ள பீடத்தில் அமர்த்தப்படும் எனவும் ஆலய நிர்வாகக்குழுவினர் தெரிவித்தனர்.