லால்குடி-ஆலங்குடி மகாஜனம் பகுதிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம் பேருந்து வசதி செய்து தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி உடனடியாக பேருந்து இயக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
காரில் செல்லும் வழியில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடி மகாஜனம் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் பலர் தங்கள் பகுதியில் போதுமான பேருந்து வசதி இல்லை என்றும் இதனால பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனம் பகுதிக்கு பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்திலிருந்து லால்குடிக்கு இலவச மகளிர் பேருந்து இயக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் கொண்டாட்டத்துடன் பேருந்தை வரவேற்றனர். கோரிக்கை விடுத்த மறுநாளே பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.