தமிழ்நாடு

வெளிநாடு சென்றால் மௌன விரதமா இருக்க முடியும்?  ப. சிதம்பரம்

10th Jun 2023 12:26 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: வெளிநாட்டுக்குப் போனால் மௌன விரதமா இருக்க முடியும்?  என்று காங்கிரஸ் மூத்த தலைவர்  ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர் என்றும் சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை அவர் அளித்த பேட்டியில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரு பெரும் திட்டங்களைத் தந்திருக்கிறேன்.

திருமயத்தில் ரூ.2 கோடியில் நூலகம் கட்டும் திட்டம் இம்மாத இறுதிக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் பணிகள் தொடங்கப்படலாம்.

ADVERTISEMENT

ஆலங்குடியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடம் ரூ. 1.25 கோடியில் கட்டும் திட்டத்தில் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையில் இருக்கிறது. இப்பணி வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கப்படலாம். இவ்விரு பணிகளையும் விரைந்து மேற்கொள்ள ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினேன்.

மத்தியில் ஆளும் பாஜகவை யாரும் தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. இவர்கள்  விமர்சனங்களையே பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். 

பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். விமர்சிக்கவே கூடாதா? விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத ஒரு கட்சி, ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.

ராகுல்காந்தி வெளிநாட்டுக்குப் போய் பிரதமரை விமர்சிப்பதாகவும் கூறுகிறார்கள். வெளிநாட்டுக்குப் போனால் மௌன விரதமா இருக்க முடியும்?  என்றார் ப. சிதம்பரம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT