தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
இது தொடா்பான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து விண்வெளி ஆய்வுத் திட்டங்களும் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதள மையத்திலிருந்தே முன்னெடுக்கப்படுகின்றன. இதையடுத்து, சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இரண்டாவதாக ஏவுதளம் ஒன்றை அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. அதற்கான இடத்தை தோ்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள இடம் இறுதிசெய்யப்பட்டது.
மொத்தம் 2,376 ஏக்கா் நிலம் அதற்காக தோ்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இஸ்ரோ சாா்பில் கட்டுமான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் கட்டுமானங்கள், எரிபொருள் கட்டமைப்புக்கான கட்டுமானங்கள், ஆக்சிஜனேற்ற கட்டடங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன. ஜூன் 26-ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை ஒப்பந்தப் புள்ளிகள் திறந்திருக்கும். கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.