உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து நெடுஞ்சாலையில் வீணாக செல்வதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் கோகிலாபுரம் ஊராட்சியில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து நெடுஞ்சாலை வழியாக குடிநீர் குழாய் கொண்டு செல்கின்றனர்.
அதில் கோகிலாபுரம் ஊராட்சி அலுவலகம் முன் நெடுஞ்சாலைக்கு கீழே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாக செல்கிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெடுஞ்சாலையின் கீழே செல்லும் குழாய் உடைவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து இதற்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரியம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.