காரைக்கால் : காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் தேவஸ்தானம் சார்பில் 63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா என்ற பெயரில் உற்சவம் நடத்தப்படுகிறது.
நிகழ் ஆண்டுக்கான உற்சவம் இம்மாதம் 30-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் (பரமதத்தர்) தொடங்குகிறது. ஜூலை 1-ஆம் தேதி காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம், 2-ஆம் தேதி பிச்சாண்டவர் அபிஷேகம் மற்றும் பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் புறப்பாடு (மாங்கல் இறைத்தல்) நடைபெறுகிறது.
3-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா பூர்வாங்கமாக தொடங்கும் விதத்தில் இன்று வியாழக்கிழமை காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பந்தல்கால் முகூர்த்தம் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினர், திருவிழா உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழா சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவல் வாரியத்தினர் தெரிவித்தனர்.