மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரி மற்றும் அவரது கணவருக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2010 இல் மண்டல பாஸ்போர்ட் உதவி அதிகாரியாக பணியாற்றியவர் கீதாபாய். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கீதாபாய் மற்றும் அவரது கணவர் நரசிம்மபாய் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 17.50 லட்சம் பணம் மற்றும் ரூ. 2 கோடி மதிப்புள்ள வங்கி வைப்பு நிதி ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், கடந்த 2016 இல், இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துகளை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார்.
சிபிஐ தரப்பில், "மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவண, ஆதாரங்கள் உள்ளன" என வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.